அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வவுனியா – மன்னார் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டது.
இன்று (28.06) காலை 9.00 மணி தொடக்கம் 10.30 மணி வரை சுமார் ஒன்டரை மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் அவ் வீதியுடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து பெரியகட்டு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் கிராமத்தினை சேர்ந்த மக்களினால் இவ் கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவல வாயில் முன்பாக காலை 9.30 மணியளவில் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 30 நிமிடங்களின் பின்னரும் எவ்வித அதிகாரிகளும் போராட்ட இடத்திற்கு வருகை தராமையினையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் வவுனியா – மன்னார் பிரதான வீதியினை முற்றாக வழிமறித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இதன் காரணமாக அவ்வீதியுடான போக்குவரத்து ஒரு மணி நேரமாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
அதன் பின்னர் போராட்ட இடத்திற்கு வருகை தந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியினை விட்டு செல்ல மறுப்பு தெரிவித்தனர்.
அதன் பின்னர் பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார் எனினும் மக்கள் கிராம சேவையாளர் இவ்விடத்திற்கு சமூகளிக்கும் வரை தாம் செல்ல மாட்டோம் என தெரிவித்த நிலையில் பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களை பலவந்தமாக தள்ளியமையுடன் கதிரையில் அமந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட நபரை எழுப்பி அவரை தள்ளியதுடன் அவர் அமந்திருந்த கதிரையினை தூக்கி பற்றையில் வீசினார்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் செயலால் ஆத்திரமடைந்த மக்கள் மீண்டும் வீதியில் இறங்கி தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த பெரியகட்டு கிராம சேவையாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி மேல்முறையீடுகளை மேற்கொள்ளுமாறும் தன்னால் இயன்ற உதவிகளை தாம் செய்வதாகவும் தெரிவித்தமையினையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதுடன் பொதுமக்கள் வீதியினை விட்டு வெளியேறினர்.
எனினும் கதிரையில் அமந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட நபரை எழுப்பி அவரை தள்ளியதுடன் அவர் அமந்திருந்த கதிரையினை தூக்கி பற்றையில் வீசிய பொறுப்பதிகாரி அவரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என மக்கள் தெரிவித்தமையினையடுத்து பொறுப்பதிகாரி அவரிடம் மன்னிப்பு கோரினார் எனினும் பாதிக்கப்பட்ட நபர் பொறுப்பதிகாரியின் பதிலுக்கு உடன்படவில்லை என்பதுடன் நான் தலமைக்காரியாலயத்தில் முறைப்பாடு செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.