வவுனியா, ஓமந்தை பகுதியில் பெண்களை தாக்கி 7 இலட்சம் பெறுமதியான தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா ஓமந்தை A9 வீதியில் நேற்றையதினம்(23.01.2025) மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை பின் தொடர்ந்து சென்ற இளைஞர்கள் இருவர் குறித்த பெண்களை வழிமறித்து அவர்களை தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த ரூபா 7 இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரின் அவசர தொலைபேசி இலக்கமான 107இற்கு தொடர்பு கொண்டு முறையிட்டதை அடுத்து உடனடியாக செயல்பட்ட ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக்க அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த இளைஞர்களை அடையாளம் கண்டு ஓமந்தை, சேமமடு பகுதியில் வைத்து துரத்திப் பிடித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து குறித்த தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்தவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.