போதைப் பொருளை ஒழிக்கும் வகையில் இலங்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதி நடவடிக்கையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நீதி நடவடிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில், போதைப்பொருள் சமூகத்தின் அழுத்தமான பிரச்சினையாக இருந்தாலும், அது மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் நபர்களை நியாயமான விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருளுக்கு எதிரான நீதி நடவடிக்கையின் கீழ் அங்கீகரிக்கப்படாத தேடுதல்கள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் சில சந்தேக நபர்களை சித்திரவதை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிடுகிறார்.
இந்நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 897 போதைப்பொருள் தொடர்பான சந்தேக நபர்கள் Operation Justice மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.