ஒரு கிலோவுக்கு 25 சென்ட் என்ற வரியின் கீழ் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் இருப்புக்களை லங்கா சதொச, பல்பொருள் அங்காடிகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் 275 ரூபாவிற்கு பெற்றுககொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஒரு மாத காலத்திற்கு மாத்திரம் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இறக்குமதி வரி 25 சதமாக இருந்த போது இறக்குமதி செய்யப்பட்ட சீனி கையிருப்புகளை அரசாங்கத்தால் கையகப்படுத்தி லங்கா சதொச மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகள் ஊடாக கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று (20.11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், குறித்த சீனி கையிருப்பு அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டு லங்கா சதொச மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக கூறினார்.
இதன் மூலம் சந்தையில் தற்போது நிலவும் சீனி தட்டுப்பாடு தீர்க்கப்படும் எனவும், லங்கா சதொச உள்ளிட்ட பல்பொருள் அங்காடிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களுக்கு போதியளவு சீனி கையிருப்பு கிடைப்பதை உறுதி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.