நாட்டில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் சனத்தொகையில் 14.6 வீதமானவர்கள் தற்போது நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் அருந்திக சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “உலக சனத்தொகையில் 500 மில்லியனுக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் நிலைமையைப் பற்றிப் பேசினால், உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்திற்கு இணங்க சுகாதார அமைச்சினால் ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் நீரிழிவு நோயாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இது உண்மையில் இலங்கை முழுவதிலும் உள்ள 18-69 வயதுக்குட்பட்ட பெரியவர்களை உள்ளடக்கியது. நாங்கள் இதை ஒரு பிரதிநிதி மாதிரி மூலம் செய்கிறோம். முடிவுகளின்படி, 14.6% நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.
கடந்த 2015 இல் 7.4 வீதமாக இருந்த நிலையில், தற்புாது 14.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறைகள் அதிகரிப்பதையே இது காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.