இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் மறைந்த பொன்னையா மாணிக்கவாசகம் நினைவாக மாணிக்கம் விருது அறிமுகப்படுத்தப்பட்டு சிரேஷ்ட ஊடகவியலாளர் தினசேன ரத்துகமகேக்கு வழங்கி வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா – குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் (28.10.2023) இடம்பெற்றது.

வவுனியா ஊடக அமையத்தின் ஆலோகராகவும், அதன் உருவாக்கத்திற்கு காரணமாகவும் இருந்த இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளாரான பொன்னையா மாணிக்கவாசகம் சுகயீனம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார்.
எனவே, அவரது நினைவாக வவுனியா ஊடக அமையமானது மாணிக்கம் விருதினை அறிமுகம் செய்து வழங்கி வைத்துள்ளது.இலங்கையின் ஊடகவியலாளர், சிங்கள வெளிநாட்டு சேவை ஊடாக மக்கள் மத்தியின் நன்மதிப்பை பெற்றதுடன், மறைந்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகத்துடன் இணைந்து தமிழ் மக்களது பிரச்சனைகளை போர் காலத்தில , போருக்கு பின்னரும் சிங்கள, ஆங்கில மொழி ஊடகங்கள் மூலம் உலகறியச் செய்து இன்று வரை ஊடகவியலாளராக பணியாற்றி வருவதை பாராட்டி வவுனியாவைச் சேர்ந்த தினசேன ரத்துகமகேக்கு குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த விருதானது சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.நிக்ஸன், மொனராகலை ஊடகவியலாளர்கள் மற்றும் பிரதீபா ஊடக வலையமைப்பு, திருகோணமலை ஊடகவியலாளர்கள், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஊடகவியலாளர்களின் சங்கமத்தோடு இடம்பெற்ற நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ‘தினசேன ரத்துகமகே’ அவர்களுக்கு மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகத்தின் துணைவியார் மற்றும் யுஎஸ்சைட் நிறுவனத்தின் ஸ்கோர் வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஜெ.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.