முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட வன்னிவிலன்குலம் மக்கள் இன்றைய தினம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன்பு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது காணிகளுக்கான முதல்தர ஆவணத்தை தருமாறு கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
“நில அபகரிப்பு செய்பவர்களுக்கு சாட்சி சொல்லும் பிரதேச செயலகம்” “வனலாகா அதிகாரிகளுக்கு வாழ் பிடிக்காதே” “வனலாகா அதிகாரிகள் மாமனா மச்சானா பதில் சொல்:
அடக்காதே அடக்காதே மக்களை அடக்காதே போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டடத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பாண்டியன்குளம் சந்தியிலிருந்து பேரணியாக புறப்பட்ட கிராம மக்கள் பிரதேச செயலக வாசலில் நின்றவாறு கோசங்களை எழுப்பினர் கடந்த 2014ம் ஆண்டு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தால் துவரங்குளம் வயல் காணிக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை உறுதிப்படுத்தி (முதல் பிரதியை) எமக்குத் தாருங்கள் எனவும் இதுவரை காலமும் பிரதேச செயலகத்தால் அனுமதிகள் மறுக்கப்பட்டு வருவதாகவும் , மாகாண காணி ஆணையாளர் வழங்குமாறு தெரிவித்தும் பிரதேச செயலகம் வழங்க முன்வரவில்லை எனவும் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் 58 விவசாயிகளுக்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட காணிக்கான உறுதியை வழங்குமாறு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் இந்த ஆரப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , பாராளுமன்ற உறுப்பினர் விநோதரலிங்கம் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா , முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன் , சிவமோகன் மாந்தை கிழக்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் உதவி பிரதேச செயலாளரிடம் மகஜரும் பிரதேச மக்களால் கையளிக்கப்பட்டது .
இதேவேளை இது தொடர்ப்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினைக்கான தீர்வினை பெற்று தருவதாக கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்